Pages

Sunday 15 January 2012

பொங்கல் - நாம் கொண்டாடலாமா?

பொங்கல் - நாம் கொண்டாடலாமா என்கிற கேள்வியை நான் எழுப்புவது நியாயமில்லைதான். ஏனெனில் பல  இன்னும் சொல்லப் போனால் எல்லா க. கிறித்தவர்களும் பொங்கல் வைப்பதை ஒரு நிகழ்வாகவே கொண்டாடி வருகிறார்கள். ஆனால் அது மிகச் சரியான முடிவுதான்.
ஆனால் நமது விழா சூரியனை எடுத்துவிட்டு அந்தோனியாரை முன்னிறுத்தி விட்டோம்.பொங்கல் விழாவுக்கு மிக அருகாமையில் வரக்கூடிய ஒரு புனிதர் என்பதனாலும், அவர் மிகவும் பேமஸ் என்பதனாலும் இது இன்னும் நமது மத்தியில் மிகச் சிறப்பாகவே வந்து விட்டது.
ஆனால் விசுவாசச் சிக்கல்களுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதைக் கிறித்தவ மதத்திற்கூடாகப் பார்ப்பதிலும் தவறில்லை. ஆனால் அதே சமயம் இதைத் தமிழருக்குண்டான விழாவாகப் பார்ப்பதிலும் தவறில்லை என்பதை எல்லாரும் நினைவில் வைப்பது நல்லது.





Wednesday 28 December 2011

கிறித்துப் பிறப்பு வாழ்த்துகள்

இயேசு இந்த உலகத்தில் வாழ்ந்தாரா இல்லையா என்பது குறித்த சர்ச்சைகள் இல்லாமல் இல்லை.

இயேசு கிறிஸ்து என்கிற இறைமனிதன் இந்த உலகில் ஏற்படுத்திய பாதிப்பை வேறெவரும் ஏற்படுத்தவில்லை.

இயேசுவைப் பின்பற்றும் பணியாளர்கள் 'மனு உரு' குறித்த சரியான புரிதலையும் - இவ்வுலகைப் பற்றிய சரியான புரிதலையும் கொள்ளவேண்டியது அவசியம்.

இந்த உலகம் - நாம் வாழும் உலகம் அழகான உலகம். கடவுளே விரும்பி இந்த உலகத்தில் பிறக்கிற போது, நாம் இந்த உலகை அதன் இருப்பை அசட்டை செய்வது சரியல்ல. இயேசு இந்த உலகை அழகு படுத்தியது போல நாமும் அழகு படுத்த வேண்டியது அவசியம் - அசட்டை செய்வதல்ல .

Monday 19 December 2011

திருமணத்துறவு - 2

கடந்த பதிவில் தொடரும் என்று குறிப்பிடாமலேயே அடுத்து சில விஷயங்களைப் பற்றி எழுதுவேன் என்று கோடிட்டுக் காட்டியிருந்தேன்.
அதாவது - இது நாமே உருவாக்கிக் கொண்டது.
இதில் கடவுளை இழுப்பதற்கு வேலையில்லை.
[ஒருவேளை, எனக்கு திருச்சபை வரலாறு தெரியவில்லையோ என்னவோ.
இதைப் பற்றி வேண்டுமானால் பிறகு எழுதலாம்]

அதாவது - திருமணத்துறவு பற்றியும் அதில் உள்ள சிக்கல்கள் பற்றியும்.
பெடபிலயா பற்றி மட்டும் எழுதியதால் விபச்சாரம் சரியா என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள் – இப்படிக் கேட்டால் என்ன சொல்லமுடியும்?

சிறுவர்களைத் துன்புறுத்துவது தவறு என்கிறோம் – ஏனெனில் அது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக நடக்கிறது. அப்ப பெண்களோடு நடக்கலாமான்னா என்ன சொல்ல முடியும்? அது அவங்க விருப்பத்தைப் பொருத்தது. நம்ம என்ன செய்ய முடியம்?

"திருமணத்துறவிற்கு" எதிராக இத்தகைய நிகழ்வுகள் நடப்பதை வன்மையாகக் கண்டிப்பதுதான்நமது நோக்கமமே தவிர வேறு ஒன்றும் இல்லை.

எனவே இந்தப் பிரச்சனைகளோடு தொடர்புடைய திருமணத் துறவு பற்றியும் அலசுவது அவசியம்.

ஒரு குரு ஒரு பெண்ணோடு [-adult -] தொடர்பு கொண்டால் அது அவருடைய தனிப் பட்ட விருப்பம்.அல்லது நமது மொழியில் பாவம். அதை அவர் சரி பண்ணிக் கொள்ளலாம் அல்லது அதற்காக திருச்சபை கொடுக்கும் தண்டனைகளை அனுபவிக்கலாம். அதைத் தாண்டி இது சிவில் குற்றம் என்றால் அதற்கான தண்டனையையும் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். [எல்லாவற்றையும் அனுபவிக்கும் போது தண்டனையையும் அனுபவிக்கத்தானே வேண்டும்.]

அதாவது, இதையாவது நாம் ஒரு விதத்தில், நாம் மனித பலவீனம் என்கிற விதத்தில் புரிந்து கொள்ளலாம்.ஆனால் பெடபிலியா என்பது அப்படிப் பட்டதல்ல. அதற்காக நான் மற்றதைச் சரி என்று சொல்லவுமில்லை.
நாம் நமது கட்டுப் பாட்டிற்குள் இல்லாத போது எதன் கட்டுப் பாட்டில் இருக்கிறோமோ அந்தக் கட்டுப்பாட்டிலேயே போவதற்கான துணிவு வேண்டும் என்பதைத் தான் தெளிவு படுத்த விரும்புகிறேன். [இதன் வழியாய் எனக்குள்ள துணிவையும் அதிகரித்துக் கொள்கிறேன்.]

ஏன் நாம் இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறோம்?

  • பாலியல் உறவுகளில் ஈடுபடுவது பாவம் என்ற சிந்தனை நமது பண்பாட்டில் ஊறிக் கிடக்கிறது. நம் மனதிற்குள் ஆயிரமாயிரம் அழுக்கு மூட்டைகளைச் சுமந்து கொண்டு வெளியே வெள்ளை உடையில் வான தூதர்களாகக் காட்டிக் கொள்கிறோம். ஏறக்குறைய எல்லாருமே அப்படித்தான். தனக்குள் இருக்கும் குப்பைகளைக் காட்டிக் கொள்ளாமல் நாகரிகமாகப் பழகப் பேசக் கற்றுக் கொண்டோம்.பாலியல் பற்றி வெளியில் பேசுவது தவறு என்றும் – அதில் நமக்குள் ஒருக் கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டோம். நான் எனது தனிப்பட்ட வாழ்வில் எப்படி இருந்தாலும் சரி - சிலவற்றை சரி என்று சொல்லக் கற்றுக் கொண்டோம். அது தவறென்றால் வேறென்ன செய்யலாம்.

பெடபிலியாவுக்கு எதிராக விவிலியம் ஒன்றும் சொல்லவில்லையா – அல்லது ஏதாவது சொல்கிறதா?
சரி அது அடுத்த விஷயம்.

  • திருமணத் துறவை மேற்கொள்கிறவர்கள் பாலியல் உறவு கொண்டால் அது மிகப் பெரிய தவறாக கருதப் படும் – நமது பெயர் போய்விடும் என்கிற சூழலில், வெளியில் தெரியாமல் இருக்க அதே சமயம் நமது இச்சைகளின் கட்டுப் பாட்டிற்குள் நம்மை நுழைத்து அதில் சற்று புல்லரித்துப் போகலாமென்றுதான் பெடபிலியா.

  • இது பண்பாடு தாண்டி, நாடுகள், கடல்கள் தாண்டி எல்லா பக்கமும் குருக்கள் தங்களது இச்சைகளை இவ்வாறுதான் போக்குவதாக பத்திரிக்கைகள் ஒரு தோற்றத்தை உண்டாக்குகின்றன. இதுதான் சமயம் என்று பாஸ்டர்கள் “இதற்குத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் - பாஸ்டர் களிடம் இந்தப் பிரச்சனை எல்லாம் இல்லை பாருங்கன்னு” பேட்டியெல்லாம் குடுக்குறாங்க. ஒருவேளை அவங்களுக்கு உள்ள பொறுப்பு - திருமணம் கொடுக்கிற குடும்பம் என்கிற உணர்வு - இதெல்லாம் காரணமாக இருக்கலாம். [அவர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் பல இருக்கின்றன - ஆனால் அதுக்கு இது நேரம் இல்லை, அப்புறம் அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் வேண்டாம்?]

*நமது கேள்வி என்னன்னா -
திருமணம் செய்து இந்தப் பணியை சிறப்பாக ஆற்றலாம் என்றால் அதில் என்ன சிக்கல்?  என்பதுதான்.
  • 4 - ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குருக்கள் திருப்பலிக்கு முதல் நாள் தன் மனைவியோடு உடலுறவு கொள்ளக் கூடாது என்றுதான் சட்ட நூல் சொன்னது. [சட்ட வல்லுனர்கள்தான் சரியா தப்பான்னு சொல்லணும்.]

  • அது மட்டுமல்ல - எத்தனை திருத்தந்தைகள் - பிற திருத்தந்தையின் மகன்கள் அல்லது ஆயர்களின் மகன்கள் என்பதையும் வரலாறு சொல்லும். திருத்தந்தையின் மகன்களே திருத்தந்தைகள் - கேட்பதற்கே நன்றாக இருக்கிறதே. திருச்சபை வரலாற்றியல் வல்லுனர்கள் நம்மைத் தெளிவு படுத்தலாம். இல்லாட்டி, Dan Brown கிட்ட சொல்லி research பண்ண சொல்லலாம். [திருச்சபை வரலாற்று நிபுணர்கள் தான் நமக்குத் தெளிவு படுத்தனும்.]

  • அதாவது கத்தோலிக்கத் திருச்சபையில் திருமணம் செய்து கொண்ட குருக்கள் இருக்கும்போது: அதைச் சரி என்று ஏற்றுக் கொள்ளும் போது - ஏன் லத்தீன் முறைப்படி திருப்பலி நிறைவேற்றும் குருக்கள் மட்டும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?
  • ஏறக்குறைய 20 சதவிகிதம் கத்தோலிக்கக் குருக்கள் திருமணம் செய்துகொண்டவர்கள் – அதாவது அவர்கள் அனைவரும் ஆர்த்தடாக்ஸ் முறையைப் பின்பற்றுபவர்கள் – ஆனாலும் கத்தோலிக்கர்கள் – அதேசமயத்தில் அமெரிக்காவிலும் ஏறக்குறைய நூறு குருக்கள் திருமணம் செய்தவர்களாக இருக்கின்றனர் – ஜூலை இருபத்தி இரண்டாம் தேதி 1980 –ம் ஆண்டு பிற சபைகளில் திருமணம் செய்து குருக்களாக உள்ளவர்கள் கத்தோலிக்கத் திருச்சபைக்கு வரும் போது தாங்கள் மனைவியை விவாகரத்துச் செய்ய வேண்டிய அவசியமில்லை – அப்படியே ஏற்றுக் கொள்கிறோம் என்று உரோமை சொன்னது. அவர்களெல்லாம் திருமணம் செய்து குருத்துவ பணியை ஆற்றுகிற போது ஏன் மற்றவர்களால் நிறைவேற்ற முடியாது. இத்தனைக்கும் முதல் போப்பே திருமணம் ஆனவர்தானே!

  • அதனால் இந்த திருமணத்துறவைப் பற்றி ஆயர்கள் சிந்திப்பது நல்லது. ஒருவேளை ஆயர்களுக்கு மட்டும் திருமணத்துறவை கட்டாயமாக்கலாம். தற்சமயம் ஜெர்மனியில் ஓர் ஆயர் இந்தக் கருத்தை முன் வைத்திருப்பதாக அறிகிறோம். அதாவது குழும வாழ்வு வாழ்கிற குருக்கள் தவிர மற்றவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.

  • பாலியல் குற்றங்களுக்கான மாற்று என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அதனால் இது போன்ற குற்றங்கள் குறைந்துவிடாது என்பது நமக்குத் தெரியும். ஏனெனில் பாலியல் குற்றங்களுக்காக மாட்டுவதில் திருமணமானவர்களும் [திருமணமானவர்கள் தான்] நிறைய இருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். அதனால் அதற்கான மாற்று இல்லை.

  • மாறாக நமக்கான பொறுப்பும்- பொறுப்புணர்வும் - நம் மீது இருக்கிற அறப்பொறுப்பையும் நாம் உணர ஒரு வாய்ப்பு இருக்கிறது. திருமணத்தினால்தான் அது வர வேண்டும் என்று இல்லை.

  • ஆனால் திருமணம் செய்திருக்கிற நமது பெற்றோர்களின் அறப் பொறுப்பை நாம் பார்த்தாலே போதும்.எவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும், சிக்கல்களுக்கு மத்தியிலும் ஒருவருக்கொருவர் பொறுப்பு உள்ளவர்களாய் - இருந்திருக்கிறார்கள். நமது நண்பர்கள் - உறவினர்கள் --- இதைவிட வேறென்ன வேண்டும்?
  • இதிலிருந்தாவது நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

[ஆனால் இன்னொரு விஷயம். இனிவரும் குருக்களுக்குத்தான் திருமணம் என்பதில்தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன். தற்போதுள்ள குருக்கள் திருமண வாழ்க்கைக்குத் தகுதியற்றவர்கள் - என்பதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.]



Monday 31 January 2011

Monday 24 January 2011

மணத்துறவு 1


தமிழத்தின் துப்பறியும் இதழ்கள் - பாதிரக்குடியில் ஒரு குரு பாலியல் தொடர்பான (பெடபிலியா) சிக்கல்களில் மாட்டிக் கொண்டதைப் பற்றியும் -அதனைத்தொடந்து உதகையைச் சேர்ந்த குரு சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் அதே பிரச்சனைக்காக மாட்டிக் கொண்டதைப் பற்றியும் விலாவாரியாக எழுதித் தீர்த்தன.
இன்னும் எத்தனை நபர்கள் அடுத்து இதில் வர இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது.
தினமலர் இதை மறந்து விடாமல் எழுதி வந்ததது.
இதை ஏன் சன் டி. வி. ஒளிபரப்ப வில்லை என்று சிலர் கேட்கிறார்கள். ஏதோ சன் டி.வி. யும் நாமும் சித்தப்பா மக்கள் மாதிரி.

அமெரிக்கா மற்றும் அயர்லாந்து திருச்சபைகள் மிகப் பெரிய சவால்களை இதனால் சந்தித்து வருகின்றன என்பதும்அதைத் தொடர்ந்து திருச் சபையின் உயர் மட்டத் தலைவர் மிகப் பெரும் குற்றச் சாட்டுகளை சந்தித்து வருவதும் நாம் அறிந்ததே.
திருச்சபை உலக அளவிலும் மிகப்பெரிய ஊடகச் சவால்களை சந்தித்து வருகிறது.
இதைப் பற்றிய தொடர் கிண்டல்களும் - திருச்சபையைப் பற்றிய கேலிச் சித்திரங்களும் நமக்கு இப்போது தேவையான ஒன்றுதான்.
இந்த கார்ட்டூன்களைப் பார்த்து சிரிக்கலாம். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகுமல்லவா!
நியூ யார்க் டைம்ஸ் - இதைப் பற்றி தொடர்ந்து எழுதிக்கொண்டு வருகிறது. அதில் இன்னும் தேடினீர்கள் என்றால் இன்னும் நிறைய இருக்கின்றது.
நியூ யார்க் டைம்ஸ் இதையே ஒரு கொள்கையாக வைத்திருக்கிறது என்று சொன்னதற்காக ஒரு பேராயரைப் பற்றிய ஒரு கட்டுரையும் கேலி செய்து இடம்பிடித்திருக்கிறது.

முதலில் சில கருத்துக்களை மிகத் தெளிவாக பதிய வேண்டியது அவசியம்.
  • எந்தத் தருணத்திலும் சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நியாயப் படுத்த முடியாது.
  • அதிலும் பல ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு பணிக்கென அமர்த்தப் படுகிற குருக்கள் அதில் ஈடுபடுவதை நாம் ஒருபோதும் சரி என்று சொல்லிவிட முடியாது.
  • வன்கொடுமைக்கு ஆளான அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பது மட்டுமல்ல: அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுக்கு அதிலிருந்து மீண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதைக் கண்டிப்பாய் செய்ய வேண்டும்.
  • தனி மனித மதிப்பீடுகள் அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடக்கும் அனைத்துக் கொடுமைகளையும் எதிர்க்கிறோம்.
  • அதோடு சேர்த்து இதில் ஈடுபட்ட நபர்களையும் நாம் இந்த ரீதியில் பார்க்க வேண்டும் - மன அளவில் பாதிக்கப் பட்டதன் விளைவாகவே இச் செயல்களில் ஈடுபடிருந்தால் அதிலருந்து மீண்டு வர நம் உதவிகளை செய்ய வேண்டும்.
இதற்குப் பிறகே நாம் பின் வருவனவற்றை எழுதுகிறோம்.

ஏற்கனவே நித்தியானந்தா செய்தியில் பத்திரிக்கையின் பொறுப்புணர்வு பற்றி அதிகம் எழுதிவிட்டதாலும் -பத்திரிக்கைகள் தங்கள் வியாபாரப் போக்கையே அதிகம் தன் மூலதனமாகக் கொண்டிருப்பதை நாம் அறிந்ததாலும் இப்போது அதை விடுத்து மற்ற நுணுக்கங்களை அலசுவோம்.

இதுக்கு கலைஞர் ஸ்டைலுதான் சரிப் பட்டு வரும்னு தோணுது - கேள்வியும் நானே பதிலும் நானே.

1. ஏன் பத்திரிக்கைகள் திருச்சபையை தாக்குவதையே தன் முதல் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றன?

திருச்சபை தன் ஆக்டோபஸ் கரங்களை எல்லாத் தளங்களிலும் விரித்து தான்தான் எல்லா அறக் கேள்விகளுக்கும் - அறப் புதிர்களுக்கும் பதில் சொல்லும் அல்லது எது சரி என்று சொல்லும் ஆற்றல் படைத்த அற அடித்தளத்தைக் கொண்டிருந்த ஒரு மிகப் பெரிய நிறுவனமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. அதாவது, எல்லாத் தளங்களிலும் (உலகப் படைப்பு - அழகியல் - மனித வாழ்வின் நோக்கம் - இன்னும் பிற) விரிந்திருந்த கரங்கள் வெறும் அறத்தளத்திற்கென்று மட்டும் சுருங்கிப் போனது. அதில் மட்டுமே தான் சக்தி வாய்ந்தவன் என்று நிரூபிக்க முயன்று கொண்டிருக்கிறது. இதில் மட்டும்தான் திருச்சபை தன் இருப்பைக் காண்பித்துக் கொண்டிருக்கிறது. உலகம் எப்படித் தோன்றியது என்று யாரும் திருச்சபையைக் கேட்கப் போவது இல்லை. அல்லது ஒரு மனிதனுக்கு உளவியல் ரீதியான பிரச்சனை பற்றி விசாரிக்க யாரும் திருச்சபை நபர்களைத் தேடி வர வேண்டிய அவசியம் இல்லை. சிசுக்கொலை தவறு - ஓரினச்சேர்கை தவறு - திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது தவறு - என்று இன்றைய உலகம் எதை எல்லாம் சரி என்று அறவியலில் நிலை நாட்ட முயன்று கொண்டிருக்கிறதோ அந்த தளத்தில் திருச்சபை தன் இருப்பை உரத்த குரலில் தெரிவித்துக் கொண்டிருந்தது.

இப்போது இது போன்று அறப் பிரச்சனை தொடர்பாக திருச்சபை உறுப்பினர்கள் மாட்டிக் கொள்கிறபோது - அறப் பிரச்சனை தொடர்பாக எது சரி எது தவறு என்று சொல்வதற்கான அருகதை உனக்கு இல்லை என்று சொல்வதுதான் இன்றைய பத்திரிக்கைகளின் நோக்கமாகத் தெரிகிறது. உங்க பிரச்சனையை முதலில் சரி பண்ணு பின்னாடி எங்க கதையைப் பாக்கலாம் - அப்படிங்கிறதுதான். அதுமட்டுமல்ல, திருச்சபை எந்தவிதத்திலும் உலகில் ஒரு மிகப் பெரிய நிறுவனமாக இருக்கக் கூடாது என்பதும்தான் இதன் முதல் பிரச்சனை. எனவே இது வெறும் பாலியல் தொடர்பான பிரச்சனை மட்டுமல்ல யார் பெரியவன் என்பதற்கான சண்டையில் வருகிற அதிகார அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். இருளில் குற்றங்கள் செய்துவிட்டு வெளியில் பாவமன்னிப்புக் கொடுக்கும் நமக்கு இது சரியான சவுக்கடியாகவே தெரிகிறது. இது நிச்சயம் நமக்குத் தேவைதான். பல வரலாற்றுப் பிழைகளுக்கு நாமும் ஒரு விதத்தில் பொறுப்பானவர்களே.

2 . சரி அதுக்கு போப் என்ன பண்ணுவார் பாவம்?

அதுவும் சரிதான். ஆனா ஒரு அப்பா தன் மகனோ மகளோ தவறு செய்தால் மற்றவர்கள் கண்களுக்கு தெரியாமல் இருக்க அதை மறைக்க முயற்சிப்பார். அதைப் போலவே தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட குரு தவறு செய்யும்போது அதை மறைக்க அவர் முயன்றிருக்கலாம் அல்லது தெரியாமலே இருந்திருக்கலாம். ஆனால் பிற்பாடு செய்திகள் வெளிவரும் போது அதை மறைத்ததற்காக ஒரு தந்தை என்ன கவலையை அடைவாரோ அல்லது தண்டனையை அனுபவிப்பாரோ அதையே தற்போது திருத்தந்தையும் அனுபவித்து வருகிறார் என்று நினைக்கிறேன்.

ஆனாலும், உடனடியாக தவறு என்று தெரிகிற போது அதை ஏற்றுக் கொள்கிற மனப் பக்குவமும் வேண்டும்.


ஒரு விஷயம்: சிக்கல்களில் மாட்டிக் கொண்டிருக்கிற ஒரு குரு திருச்சபையின் உறுப்பினர்தான் என்பது ஊடகங்களில் வெளி வருவதற்கு முன்புவரை திருத்தந்தைக்குத் தெரியாது. அப்படிப்பட்ட நபர் திருச்சபையில் குருவாக இருக்கிறார் என்பது கூட அவருக்குத் தெரியாது - தெரிந்து கொள்ளவும் முடியாது - தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. தன் உறுப்பினரையே தெரியாத நிலையில் எல்லாவற்றிற்கும் அவரைக் குறை சொல்லுவது தவறு என்று தோன்றுகிறது.

ஒரு குரு மாட்டிக் கொண்டதற்காக திருத்தந்தையைக் குறை சொல்லுவது எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. ஏன்?
ஒரு குருவும் திருச்சபையின் உறுப்பினர்தான் என்கிற விதத்தில் அதற்காக அந்த நிறுவனத்தின் தலைவரை குறை சொல்லுவதை ஏற்றுக் கொள்ள முடியாது எனினும் சிலர் அதை சரி என்று வாதிடலாம்.
எனக்கு ஏன் வேதனை என்றால் - இது சரி என்றாலும் –
எந்த ஒரு கிறித்தவன் பாலியல் பிரச்சனை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டாலும் அல்லது கிரிமினல் வழக்கில் மாட்டிக்கொண்டாலும் - அதற்காக ஊடகங்கள் திருத்தந்தையைக் குறை சொல்லியிருக்க வேண்டும்.
ஆனால் - குருக்கள் மாட்டும்போது மட்டும் திருத்தந்தையைக் குறை சொல்லுவது - எனக்கு வேதனையை உண்டு பண்ணுகிறது - ஏனெனில் நம் திருச்சபை இன்னும் (வத்திக்கான் இரண்டிற்குப் பிறகும்) மக்கள் திருச்சபையாக இல்லை - வெறும் குருக்கள் திருச்சபையாகத்தான் இருக்கிறது அல்லது அதிகாரத் திருச்சபையாகத்தான் இருக்கிறது என்பதற்கு இது மிகப் பெரிய உதாரணம். உலக இறையியலார்கள் மற்றும் தமிழக இறையியலாளர்கள் எழுதுவது போல இன்னும் இது மக்கள் திருச்சபையாக எல்லாம் இல்லை.
இதுதான் மிகப் பெரிய வேதனை.

எந்த ஒரு அடிமட்ட உறுப்பினர் தவறு செய்தாலும் அதற்காக திருச்சபை தவறு செய்தது போல உணர வேண்டும் என்பது மட்டுமல்ல - குருக்கள் எந்த விதத்திலும் அடிமட்ட உறுப்பினர்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் இல்லை. [பணியில் மட்டுமே உயர்ந்தவர்கள்] எனவே இந்த நிகழ்விற்குப் பிறகாவது திருச்சபை தனது அமைப்பைப் பற்றி - ஆயர்களின் குருக்களின் பனி பற்றி - அனைவரின் அதிகாரம் பற்றி - இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. ஒன்று இன்றைய நிலையில் நமது பனியின் நோக்கம், திருச்சபையின் நோக்கம் - இன்றைய இறையாட்சிப் பனி என்ன - உண்மையான கிறித்தவ வாழ்வு எது - எப்படி சமுதாய விடுதலை என்பது முழு மனித விடுதலையோடு ஒன்றியிருக்கிறது -

இதெல்லாம் இதுவரை பேசாமல் இல்லை. இருக்கிறதை மீண்டும் நினைவு படுத்திக்கொண்டாலே போதும்.
இல்லையென்றால் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் - மீண்டும் லத்தீனில் பூசை வைப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது ஆல்டரில் mic வைக்கலாமா - பூத்தொட்டிகள் வைக்கலாமா வைக்கக் கூடாதா என்று பேசலாம்.

3 . அப்ப ஆயர்கள் மீது குறை சொல்லலாமா?

அவர்களும் என்ன பண்ணுவார்கள் பாவம்.
பிள்ளைகள் செய்யற தவறுக்கு அப்பா என்ன செய்வார்.
கண்டிக்கலாம்.எனக்குத் தெரியும்னு சொல்ற பிள்ளைகளை என்ன பண்ண முடியும்?
சரி நீனே பாத்துக்கன்னு விட்டுற வேண்டியதுதான்.
போப் சொன்னமாதிரி கை கழுவி விட்டுட்டா நல்லதா?
(எழுத நிறைய விஷயங்கள் இருக்கே!)
அதுவுமில்லாமல் ஒருவர் செய்கிற தவறுக்கு இன்னொருவரை பலிகடா ஆக்குவதும் தவறுதான்.
ஆனால் ஏன் குருக்கள் இப்படி இருக்கிறார்கள் என்பதற்குஅவர்களுக்கும் ஆயர்களுக்கும் உள்ள உறவு நிலை கூட ஒரு காரணமாக இருக்கலாமோ?
தெரியலை .
இருந்தாலும், அதைபோய் ஒரு காரணமா சொல்லுவது எப்படின்னு தெரியலை.


4 . அப்ப யாருதான் காரணம்?
யாரு - நம்மதான். அடிப்படையில குருக்களின் மன நிலை நிறைய மாறியிருக்குன்னு தோணுது.
என்னதான் நாம் வந்து வாழ்க்கையை sacrifice பண்ணுனேன் பேர்வழி - ன்னு பேசுனாலும்
அப்படி யாரும் sacrifice பண்ணின மாதிரி தெரியலை.
நல்ல இடம் - நல்ல சாப்பாடு - அதிக அதிகாரம் - நம் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த மரியாதை -
கடவுளின் குரல் என்கிற விதத்தில் அதற்குக் கிடைக்கிற பயம் கலந்த மரியாதை -
நாம் தவறே செய்தாலும் மறைக்க முயல்கிற மக்களும் உயர் அதிகாரிகளும் -
அல்லது மறைக்க செய்வதற்கான சக்தி வாய்ந்த பணம் - இன்னும் என்னவெல்லாம் ----

இதுதான் எந்தத் தவறையும் துணிந்து செய்வதற்கான அதிகாரத்தைக் கொடுக்கிறது.
கட்டுப் படுத்துவதற்கு யாரும் இல்லை என்கிற துணிச்சல்
சமூகம் கொடுக்கும் அழுத்தம்
[பாலியல் உணர்வைக் வெளிப் படுத்தினால் அதனால் சமுதாயம் நமது பேரைக் கெடுக்கிற நிலை.
ஒரு சாமியார் ஒரு பெண்ணோடு பேசினாலே இட்டுக் கட்டி பேசும் சமுதாயம்.
எனவே யாருக்கும் தெரியாத விதத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது]
தன் சிறு வயதில் தான் இவ்வாறு கொடுமைப் படுத்தப் பட்டது,
அல்லது புதியதாய் ஏதாவது முயற்சி செய்யும் ஆர்வம் –

இன்னும் என்னவெல்லாம் காரணமாக இருக்கலாம் என்பதெல்லாம் பட்டியல் இடலாம்.

எந்த ஒரு தவறையும் தனி ஒரு மனிதன் தான் செய்கிறான் என்கிற விதத்தில்
அவரவர்தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.
அதே சமயத்தில் குற்றம் புரிந்தவர் மனதளவில் பாதிக்கப் படும் போது
அவர்களை ஆற்றுப் படுத்தும் செயல்களும் அவசியம்.
இதில்தான் ஆயர்களின் பங்களிப்பும் சக குருக்களின் உதவியும் அதிகம் தேவைப் படுகிறது. அதற்காக எல்லாத் தவறையும் சரி என்று சொல்ல முடியாது.

எல்லாருமே தவறுகிறவர்கள் என்கிற நிலையில் இது போன்ற தவறுகள் - குற்றங்களுக்கு எதிராக நாம்தான் இன்னும் உரத்து குரல் எழுப்ப வேண்டியிருக்கிறது.

நித்தியானந்தா பரவாயில்லை என்று அவருக்கு ஆதரவான அலை
தமிழகத்தில் வர நாம் காரணமாக இருக்கிறோம்.

எப்படி ஒரு மனிதன் அதுவும் குரு இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய முடியும். சிறுவர்களை –
கேட்கக் கூட முடியவில்லை.
நம் உருவாக்கத்தில் ஏதோ பிரச்சனை இருக்கிறது.

நல்ல மனிதனாக இருக்கிறவன் - கெட்ட மனிதனாக வெளியேற்றப் படும் சூழல்.
குருகுலம் வந்தவுடன் - அன்புக்குப் பதில், பணிவுக்குப் பதில், வேலைக்குப் பதில் -
நமக்கே ஒரு திமிர் வந்து விடுகிறது. நான் குரு மாணவன். என்ன பண்ண முடியும்.
நான் திருத்தொண்டன் - நான் பணியாளன் - [வெளியிலருந்து இதையெல்லாம் யாரவது படித்தால் சிரிப்பான்.]
குரு பணியை மையப் படுத்துபவனாக இருக்க வேண்டும்.
தன் நோக்கமல்ல பிறரின் நல வாழ்வுக்கான சேவைகளில் ஈடு படுபவனாக இருக்க வேண்டும்.

துறவறம் என்பதே எந்த ஒரு சிறு உறவுச் சிக்கல்களுக்கும் தன்னை குறுக்கிக் கொள்ளாமல் பரந்து பட்ட மன நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் உருவாக்கப்பட்டது அல்லது உருவானது.
இது நாமே உருவாக்கிக் கொண்டது.
இதில் கடவுளை இழுப்பதற்கு வேலையில்லை.
[ஒருவேளை எனக்கு திருச்சபை வரலாறு தெரியவில்லையோ என்னவோ.
இதைப் பற்றி வேண்டுமானால் பிறகு எழுதலாம்]

சிறு பந்தத்துக்குள் யாரும் குறுகிப் போய்விடக் கூடாது என்பதுதான் நோக்கம்.
ஆனால் நாம் மனதளவில் சுருங்கிபோய்விட்டோம்.
பணம் மையப் படுத்தப்பட்டு விட்டது.
பணம் பெற என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிற நிலையில்
பணத்தளவில் நம்மைச் சுருக்கிக் கொண்டோம்.
பணம் வந்ததும் பொருள்கள் வாங்கிக் குவித்து
பொருள்களோடு நாம் நம்மைப் பொருத்திக் கொண்டோம்.
மனிதன் என்பதைத் தாண்டி நாம்
சாதிய அளவில் நாம் சுருங்கிப் போனோம்.

மனித நேய உணர்வுகள் மழுங்கிப் பொய்
உணர்சிகளுக்குள் சிக்குண்டு போனோம்.

அதனால்தான் எல்லாமே.

பாலியல் என்கிற உணர்வின் சக்தியை மாற்றுப் படுத்த ஆயிரம் வழிகள் இருக்கும்போது நாம் -- மாற்றுப் படுத்துவது எப்படி என வழி தெரியாமல் இருக்கிறோம்.

எதற்காக குருக்கள்?

திருப்பலி வைக்க மட்டுமென்றால் அதற்கு மனத்துறவு அவசியமில்லை.
எனவே நமது பணியை பற்றி அது எப்படி இருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் ஆய்வு செய்வதற்குஇறை இயலாளர்கள் இருக்கிறார்கள் என்பதால்

நாம் இப்போது சுய ஆய்வு செய்யலாம்.

நாம்தான் விரும்பி இதில் வருகிறோம்.
என்னால் இயலாது என்றால் - வெளி வருவதற்கான துணிவு நமக்கு வேண்டும்.


5 . சரி என்னதான் செய்யலாம்?

செபம் செய்யலாம்.
வேறென்ன.

Saturday 1 January 2011

புத்தாண்டு

புத்தாண்டு புதிய நம்பிக்கையை விதைக்கின்ற நாளாக இருக்கட்டும். வரலாற்றின் கடந்த பக்கங்கள் படிப்பினையச் சொல்லித் தரும் பாடங்கள். படிக்கிறவன் கற்றுக் கொள்கிறான். இல்லாதவன் பழைய தவறுகளையே மீண்டும் செய்கிறான்.
புதியது என்பது பழையதிலிருந்து ஊற்றெடுக்கும். அதைப் புரிந்தால் பழைய நல்லவைகள் தொடரும். பழைய குற்றங்கள் மறையும்.
நம்பிக்கையின்மை மறையவும், வெறுப்பு குறையவும், வாழ்வின் சரியான புரிதல் இன்னும் சற்று அதிகமாக எல்லா மதத்திலும், எல்லார் மத்தியிலும் இருக்கவும் விழைகிறோம்.
நீதிக்கான தாகமும், நேர்மைக்கான வேட்கையும்,  அடிமைப்படுத்தும் எண்ணம் தவிர்க்கவும், அன்பின் கண்கொண்டு பார்க்கவும் இந்த ஆண்டு உதவி செய்யும் என்கிற நம்பிக்கையும் நம்மிடம் இருக்க விழைகிறேன்.

வெளிக்கொண்டாட்டங்கள் உள்மன புரிதல்களின், வெளிப்பாடுதானே தவிர,  வெறும் வெளிக் கொண்டாட்டம் மட்டுமே அல்ல.
வெறும் காலண்டர் கொண்டாட்டமாக இல்லாமால் - உள்ளிருந்து வரும் உண்மைக் கொண்டாட்டமாக இருக்கட்டும்.

Monday 1 November 2010

மனத்திடம் வேண்டும்

டாவின்சி கோட்  புத்தகம் வெளி வந்த போது, திருச்சபைக்கு பெரும் அவதூறு வந்து விட்டது என்று தங்களின் கத்தோலிக்க விசுவாசத்தை பறை சாற்ற அந்தப் புத்தகத்தை தடை செய்ய வேண்டும் என்றும், அந்தத் திரைப் படத்தை தடை  செய்ய வேண்டும் என்றும் கூக் குரலிட்டார்கள். என்ன ஆயிற்று? புத்தகமும் விற்றுத் தீர்ந்தது, படமும் வசூலை அள்ளியது.

சொல்லப்படும் செய்தி உண்மையானால், அதை ஏற்றுக் கொள்கிற பக்குவம் வேண்டும், இல்லையென்றால் மறுத்துச் சொல்கின்ற மனத்திடமும்உண்மைக் கருத்தை வெளியிடும் நுண்ணறிவும் வேண்டும்.

Angels and Demons   - இருந்த இடம் தெரியாமல் இருந்த புத்தகம்- மீண்டும் பதிப்பிக்கப் பட்டு, திரையிலும் வந்து திருச்சபைக்குள் இருக்கிற பழமை வாதத்தை எடுத்துச் சொன்னது.

இந்த நாவல்களை எல்லாம் தாண்டி, - பத்திரிகைகள் வத்திக்கான் மீது மிகுந்த பாசத்தோடு, என்ன நடக்கிறது என்பதை உன்னிப் பாய் கவனித்து வருகிறதுஅமெரிக்காவில், குருக்களின் பாலியல் தொடர்பான சர்ச்சைகள், சிறுவர்களின் மீது குருக்களின் பாலியல் கொடுமைகள் - பல மறைமாவட்டங்களை ஒட்டு மொத்தமாக ஒன்றுமில்லாத நிலைக்கு மாற்றியது. சொத்துக்களை எல்லாம் விற்று பணம் கொடுக்க வேண்டியதாயிற்று.

அயர்லாந்து இப்போது விழி பிதுங்கி நிற்கிறது. அதைத் தொடர்ந்து வத்திக்கானுக்கு பல நெருக்கடிகள்.

மணத்துறவை   மீண்டும் திருச்சபை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. மணத் துறவை இயேசு கட்டாயம் அனைவரும்மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னதாகவோ அல்லது அது குருக்களுக்கு அவசியம் என்று விவிலியம் சொல்வதாக நமக்குத் தெரியவில்லை.

தொடக்க காலத்து திருச்சபையும் இதற்கு முற்றிலுமாக உடன்பட்டதாகவும் சொல்வதற்கு இல்லை. அதற்கு நாம் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமா? -
Tradition . பாரம்பரியம் மிக அவசியம் ? ! ?

நன்றாக யோசித்துப் பாருங்கள்.
இன்றைக்கு மீடியாவின் அபரிமிதமான வளர்ச்சியும் அதன் கழுகுக் கண்ணும்தான்
திருச்சபையை தெருவுக்குஇழுத்து வருகிறது என்று சொல்வோமானால் நம்மைப் போல உலகம் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதற்கு முன்பு செய்திகள் வெளியே வரவில்லை - இப்போது வருகின்றன.

எத்தனை துறவிகள் வசித்த கோட்டைகளுக்குள் நடந்தது என்ன என்பது நமக்குத் தெரியுமா? மணத் துறவை கடைபிடித்து திருமணம் செய்யாதவர்  கூட செய்ய யோசிக்கும் தவறுகள், குற்றங்கள் எவ்வளவு நடந்தன.

மீண்டும் பழையதைக் கிளறுவதால் ஒரு புண்ணியமும் இல்லை. இனிமேல் இருக்கும் திருச்சபையாவது ஒழுங்காக இருக்குமா?

இத்தனைக்குப் பிறகும் நான் ஏன் ஒரு கிறித்துவனாக இருக்கிறேன்?
மனிதர்கள் செய்கிற தவறுக்கு கடவுளை குறை சொல்ல முடியுமா? இவர்கள்தான் எனக்கு விசுவாசத்தைக் கொடுக்கிறார்களா என்ன?
பலர் செய்கிற தவறுகளுக்காக ஒட்டு மொத்தமாக எல்லாரையும் குறை சொல்ல முடியுமா ?
கடவுள் அவர்களைப் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கைதான். இந்த நம்பிக்கை மக்கள் மத்தியில் நிறைய இருப்பதால்தான் இவர்கள் தங்கள் தவறுகளைத் திருத்திக் கொள்ள மாட்டேன் என்கிறார்களோ?

சரி எல்லாரும் மதம் மாறிக் கொள்ளலாமா? எந்த மதம்?
எந்த மதத்தில் தவறுகள் இல்லை. பயத்தினால் ஒருவனை தவறு செய்ய விடாமல், தவறாமல் இருக்கிற மதங்கள் -
தனி மனிதர்கள் தங்களை கடவுள் என்று அறிவிக்கிற மதங்கள் -  

"கடவுள் இல்லை என்பவனை நம்பலாம்: இருக்குன்னு சொல்றவனையும் நம்பலாம்.
நான்தான் கடவுள்-ன்னு சொல்றான் பாரு அவனை மட்டும் நம்பவே கூடாது
- தமிழ் திரைப் படங்கள் கூட இது போல மேற்கோள் காட்டக்கூடிய வசனங்களை கொண்டுள்ளது ஆச்சரியம்தான்.